ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சின்ன டெக்குரு கிராமம் அருகே பெங்களூரு – ஹைதராபாத் நெடுஞ்சாலையில் ஒரு மிகப்பெரிய ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் விடியோக்கள் வெளியாகி பார்ப்பவர்களை பற்ற வைத்தது.
சாலையில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதே, ஆம்னி பேருந்து பயங்கரமாக தீப்பற்றி எரிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதில் 20 பேர் பரிதாபாக பலியாகியுள்ள சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்தில் 20 பேர் பலியாகிவிட்டனர். 20 பேர் ஜன்னல் வழியாகக் குதித்து காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுளள்னர். பலியானவர்களில் இதுவரை 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 9 உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பேருந்து தீப்பிடித்தபோது, கதவுகள் பூட்டிக்கொண்டதே பயணிகள் தப்பிக்க முடியாமல் போனதாகவும், சிலரால் மட்டுமே ஜன்னல்களை உடைத்துக் கொண்டே வெளியே குதிக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதுகிறது. மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனம் அப்பளம் போல நொருங்கி, பேருந்தின் முன்பக்கத்தின் கீழ் பகுதியில் மாட்டிக் கொள்கிறது.
இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் வெளியாகி தீப்பற்றி எரிந்து அதுவே பேருந்திலும் தீப்பிடிக்கக் காரணமாகியிருக்கிறது.
