சினிமா துறையில் உட்சபட்சமான விருதாகிய ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உலகளவில் 534 திரைக்கலைஞர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, காஸ்டிங் இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறுகிறது. விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு, ஜன. 12 முதல் 16 வரை நடைபெறும். பரிந்துரைகள், ஜன. 22-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவர்கள் அனைவரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும் அதில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,143-ஆகவும் உயரும். ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர் ஆவதற்கு அழைக்கப்படுவது திரைத்துறையில் கவுரவமாகக் கருதப்படுகிறது.