இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதன்முறையாக பயணிகள் விமானம் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் பொது கூட்டுப் பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (PJSC-UAC) கையெழுத்திட்டுள்ளன.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி என்ன மாதிரியான விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன இது நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றிய விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
நாட்டின் உற்பத்தி சேவையில் முக்கிய பங்கு
நாட்டிற்கான உற்பத்தி மற்றும் சேவைகளில் மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றும் முயற்சியில் கடந்த பல வருடங்களாகவே இந்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. இதன் முக்கியமான முயற்சியாகவே சிவில் விமானப் போக்குவரத்து உற்பத்தியில் இந்தியாவின் திறனை மேம்படுத்தும் நோக்கில், எஸ்.ஜே-100 (SJ-100) ரக சிவில் பயணிகள் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது ரஷ்யாவில் கையெழுத்தாகி உள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் ஒரு முழுமையான பயணிகள் விமானம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். 1961ஆம் ஆண்டில் தொடங்கி 1988இல் முடிவடைந்த அவ்ரோ எச்.எஸ்-748 (AVRO HS-748) திட்டத்திற்குப் பிறகு, இந்திய சிவில் விமானங்கள் உற்பத்தியில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தற்போது 16க்கும் மேற்பட்ட ஏர்லைன்ஸ் (Airlines) நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் எஸ்ஜே-100, இரண்டு இன்ஜின்கள் உடன் குறுகிய உடல் உடலமைப்பை கொண்ட விமானமாகும். இதுவரை 200க்கும் மேற்பட்ட எஸ்ஜே-100 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தத்தின் கீழ், HAL இந்திய உள்நாட்டு விமான பயணிகளுக்காக எஸ்ஜே-100 விமானங்களை உற்பத்தி செய்யும் உரிமைகளைப் பெற்றுள்ளது.
மத்திய அரசின் உடான் (UDAN) திட்டத்தின் கீழ் நாட்டின் குறுகிய தூர விமான சேவையை மேம்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையான இதுகுறித்து HAL மற்றும் PJSC-UAC நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த கூட்டணி ஒத்துழைப்பு HAL மற்றும் UAC இடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நீண்டகால கூட்டாண்மைக்கு சான்றாகும்.”
“சிவில் விமான உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான பயணத்தில் இது ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த முயற்சி உடன், விமான உற்பத்தியை நாட்டின் உள்கட்டமைப்பு துறையில் சேர்க்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஒருவேளை அது நடந்தால், மக்களுக்கான நாட்டின் மற்ற உள்கட்டமைப்பு பணிகளை போன்று, விமானங்களின் உற்பத்தியை அதிகரிப்பதும் முக்கிய நோக்கமாக பார்க்கப்படும்.
அடுத்த பத்தாண்டுகளில், நாட்டின் ஒவ்வொரு மண்டலங்களுக்கு இடையேயான விமான போகுவரத்து சேவையை மேம்படுத்த 200க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் தேவைப்படும் என்றும், இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அருகிலுள்ள சர்வதேச சுற்றுலா வழித்தடங்களுக்கு மேலும் 350 விமானங்கள் தேவைப்படும் என்றும் தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதோடு, தனியார் தொழில்துறை பங்கேற்புகளுக்கும் வாய்ப்பளிக்கும் என்று HAL கூறியுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துத் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் விமான சேவைகள் கொண்டுவரப்படும்.மற்ற உலக நாடுகளை போன்று, இந்தியாவிலும் விமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால், மத்திய அரசின் இந்த முயற்சி இந்தியாவின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
