2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோ மீட்டவர் வரை அலைகள் சீறிப் பாய்ந்தது. இந்தோனேசியா தொடங்கி இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளின் கடலோர மக்கள் கொத்து கொத்தாக மூழ்கி இறந்தார்கள். இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. குழதைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோரை இழந்த குழதைகள், பொருளாதாரத்தை இழந்த மக்கள் என ஒரு கோரமான நிகழ்வை நிகழ்த்திய நாள் இன்று.
தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர் குறிப்பாக பாண்டிசேரி முதல் நாகப்பட்டினம் வரை பல மக்கள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். இயற்கைப் பேரிடர்களில் பெருந்துயரைத் தரக் கூடியது.
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வலி மாறாது. மறக்கவே முடியாது. காவிரி டெல்டா மாவட்டமான நாகையில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த துயர நாளில் கடலோர கிராம மக்கள், பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை இன்று நடத்தினர். கடலில் பால் ஊற்றியும் பூக்களைத் தூவியும் கடல் பேரலைகள் காவு கொண்ட உறவுகளுக்காக இன்று அஞ்சலி செலுத்தினர்.
