திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி மாவட்ட, மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன், தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என கூடைப்பந்து விளையாட்டுத் துறை சார்ந்த பல முக்கிய பொறுப்புகள் வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்று இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார்.
விசிக மாநாடு
அண்மையில் திருச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட விசிக மாநாட்டையும் ஆதவ் அர்ஜுன் தான் ஒருங்கிணைத்தார். இந்த மாநாடு, சிறப்பான ஏற்பாடுகளால் தனிக் கவனம் பெற்றது. ஆதவ் அர்ஜூன் சுமார் பல கோடி செலவு செய்து மிக பிரமாண்டமாக மாநாட்டை நடத்தி மாநாட்டுக்கு செலவு ஏற்றார் என்ற செய்தியும் பேசப்பட்டது. இந்நிலையில் தான் அவரை, விசிகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்தார் திருமாவளவன்.
அவர் மீது கடந்த மாதங்களாக கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை வெளியிட்ட நிகழ்ச்சியில், த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்.” என்று பேசியது பெரும் அரசியல் பரப்பரப்பைக் கிளப்பியது. அங்கு பேசப்பட்ட பல கருத்துக்கள் ஆளும் அரசுக்கு எதிராக இருந்தது. இதற்கு விசிக லிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது சம்பந்தமாக விசிக கட்சி வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவ ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று விசிக-விலிருந்து ஆறு மாத காலத்துக்கு ஆதவ் அர்ஜுனா இன்று இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார்.
ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் தளத்தில் “ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை..” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
