ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வழக்கத்திற்கு மாறாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வானிலை திடீர் மாற்றமடைந்து, குறிப்பாக ஃபுஜைரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பாறை மலைகளில் இருந்து தண்ணீர் நீர்வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. குடியிருப்பாளர்கள், வாகன ஓட்டிகள் இந்த அபூர்வ இயற்கை காட்சியை ரசித்து புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.
ஃபுஜைராவின் மலைப் பகுதிகளில் மழை நீர் வேகமாக இறங்கியதால், சாலைகளின் இருபுறங்களும் தண்ணீரால் நிரம்பி, சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல வாகனங்கள் தண்ணீரில் சிக்கியதாகவும், சில இடங்களில் மழை மற்றும் காற்று சேர்ந்து வீசியதால் காட்சி தெளிவு குறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூசி மற்றும் ஈரமான காற்று சேர்ந்து வீசுவதால், வாகனம் ஓட்டுவது கடினமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறினர்.
இதையடுத்து, தேசிய வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மழை, பலத்த காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலை காரணமாக வெளியில் செல்லும்போது அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்:
- மழை பெய்யும் நேரங்களில் மற்றும் ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- பள்ளத்தாக்குகள், மலைச்சரிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- மின்னல், இடியுடன் கூடிய நேரங்களில் திறந்த வெளி அல்லது உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
பலத்த காற்றால் தூசி மற்றும் சிறிய குப்பைகள் பறக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை கவனிக்க வேண்டும் எனவும் NCM அறிவுறுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் மதிப்பீட்டின்படி, வரும் செவ்வாய்க்கிழமை வரை நிலையற்ற வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில், நாட்டின் பல பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும், சில இடங்களில் அது கனமழையாக மாறும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் அதிக மழையால் பாதிக்கப்படும். சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஏஇ(UAE) வானிலை நிலவரம்
மழை காரணமாக, நாட்டின் வெப்பநிலை கணிசமாக குறையும் என்றும், காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் கடல் சீற்றம் அதிகரிக்கும், கடலோரப் பகுதிகளில் காற்று மற்றும் அலைகள் பலமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை, பாலைவன நாடான UAE-க்கு புதுமையான அனுபவமாக மாறியுள்ளது. பொதுவாக வறட்சியான வானிலை கொண்ட நாட்டில் பாறை மலைகளில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீர் காட்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
