வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இது வங்கிகளை பொறுத்து மாறுபடும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம். அந்த கட்டணங்களை நாம் கட்டாயமாக செலுத்தியே ஆகவேண்டும்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தனது வங்கியிலுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது. இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருவதாக தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம்தேதி வரையிலான கால அளவிற்கு ஏதேனும் குறைந்த தொகை வைத்திருந்தால் கட்டணங்கள் ஏற்கனவே இருந்துவரும் விதிகளின் படி விதிக்கப்படுவது தொடரும் என்றும் அறிவித்துள்ளது. வங்கியின் இந்த முடிவானது, வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
சாமானிய, வசதியற்ற மக்களுக்கு வங்கி செயல்பாடுகளிலான இது ஒரு நல்ல திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக PMJDY, BSBDA, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்கு ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரர் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான கட்டணங்களை இவ்வங்கி ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
