ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சரான அமீர் கான் முத்தகி (Amir Khan Muttaqi) ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தளர்வுடன் (UN Travel Waiver) இந்தியாவுக்கு ஒரு வார கால பயணமாக வந்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு, 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, ஒரு மூத்த தலிபான் தலைவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பயணமானது, இரு நாடுகளின் உறவுகளுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது, முத்தகி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிகிறது. தலிபான் அரசாங்கத்துடன் டெல்லி தனது தொடர்புகளை ஆழப்படுத்த முயல்வதால், இந்தப் பயணம் அண்டை நாடான பாகிஸ்தானால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வரும் நிலையில், அதிகாரிகள் தற்போது ஒரு சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அதாவது Diplomatic Protocol படி, சந்திப்புகளின்போது, புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளுக்காக, இந்தியக் கொடியானது வருகை தரும் தலைவரின் நாட்டின் கொடியுடன், அவர்களுக்குப் பின்னாலோ அல்லது மேசையின் மீதோ வைக்கப்பட வேண்டும்.
இந்தியா இதுவரை தலிபானின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதனால், தலிபான் கொடிக்கு இந்தியா உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கவில்லை. இது ஷஹாதா (இஸ்லாமிய விசுவாசப் பிரகடனம்) என்ற கருப்பு எழுத்துகளைக் கொண்ட வெற்று வெள்ளைத் துணி ஆகும்.
இதுவரை, டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில், தலிபான் தங்கள் கொடியைப் பறக்கவிட இந்தியா அனுமதிக்கவில்லை. அந்தத் தூதரகத்தில் இன்றும் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி ஆட்சியின்போது அதிகாரப்பூர்வமாக இருந்த பழைய ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கொடியே (The old flag of the Islamic Republic of Afghanistan – மூவர்ணக் கொடி) பறக்கிறது.
இந்திய அதிகாரிகள் முத்தகியுடன் இதற்கு முன்பு சந்திப்புகளை நடத்தியபோது, இந்தக் கொடிச் சிக்கலைத் தவிர்ப்பதற்குக் கவனமாக ஒரு வழியைப் பின்பற்றினர். உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி முத்தகியைச் சந்தித்தபோது, பின்னணியில் இந்தியக் கொடியையும் வைக்கவில்லை, தலிபான் கொடியையும் வைக்கவில்லை. கொடி இல்லாமல் பிரச்சினையைத் தவிர்த்தனர்.
ஆனால், இந்த முறை சந்திப்பு டெல்லியில் நடப்பதால், இருதரப்பு மரபுப்படி கொடியை வைப்பது சவாலாக உள்ளது. தலிபானை அங்கீகரிக்காமல் அவர்களின் கொடியை வைப்பது என்பது மறைமுக அங்கீகாரமாகக் கருதப்படும் என்பதால், இந்தக் கொடிச் சிக்கலை எப்படிச் சமாளிப்பது என்று அதிகாரிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
வரலாற்று ரீதியாக இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இருந்துள்ளது. இருப்பினும், 2021இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான படைகள் விலகியதைத் தொடர்ந்து, இந்தியா காபூலில் உள்ள தனது தூதரகத்தை மூடியது. இந்தியா தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்காக ஒரு வருடத்திற்குப் பிறகு காபூலில் ஒரு சிறிய தொழில்நுட்பப் பிரிவு கொண்ட தூதரகத்தை மீண்டும் திறந்தது. மேலும், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரிகள் மட்டத்தில் சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் மெதுவாகத் தன் உறவுகளை மேம்படுத்தி வருகிறது.
முத்தகியின் இந்த இந்தியப் பயணம், காபூலில் உள்ள தலிபான் அமைப்புடன் இந்தியாவின் உறவுகளுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவை முக்கியப் பேச்சுகளாக இருக்கும். ஆப்கானிஸ்தானின் மேம்பாட்டு முன்முயற்சிகளில் இந்தியா அதிக அளவில் பங்கேற்கவும், உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது குறித்தும் தலிபான் தரப்பு விவாதிக்க வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் மண் எந்தவொரு நாட்டிற்கும் எதிராகத் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
